லங்கமுரா: எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்த ட்ரோன்கள் மற்றும் நவீன கேமராக்கள் உள்ளிட்ட மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ‘ஸ்மார்ட் பார்டர்’ (Smart Border) திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருவதாக த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் ஊடுருவ முடியாத எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். திரிபுராவின் லங்கமுரா எல்லைக் காவல் சாவடியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் பேசிய ஷா, இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் உள்ள அனைத்து இடைவெளிகளையும் அடைத்து, அவற்றை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியாது. இந்த இலக்கை அடைய நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது மிக அவசியம், எனவே இதற்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு சார்ந்த சவால்களை மட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், கால்நடை கடத்தல், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் கள்ள நோட்டு புழக்கம் போன்ற அச்சுறுத்தல்களையும் இந்தியா எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். சட்டவிரோத ஊடுருவலால் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் பீகார் மாநிலங்களில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமித்ஷா கூறினார்.
