சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தாலுகா கிழக்காவலூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அஸ்வின் 15 வயது சிறுவன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் கணேசன், அரவிந்த் ஆகியோருடன் கிழக்காவலூர் கண்மாய் கரையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்பொழுது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினை மற்ற இரு நண்பர்களும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இன்று அதிகாலை கண்மாய் கரையில் இறந்த நிலையில் அஸ்வினின் உடலை கண்ட கிராமமக்கள் கிழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தப்பியோடிய கணேசன் மற்றும் அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
10ஆம் வகுப்பு மாணவன் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
