அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று தினங்களாக நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்று காலை முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அதே நேரத்தில் அருவி பகுதியை பார்வையிடுவதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று இரண்டாவது நாளாக அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீடிக்கும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளில் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 9 அடி உயர்ந்து 58.80 அணியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5140 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதே போன்று 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் ஒரேநாளில் 13 அடி உயர்ந்து 76.77 அடியாக உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அருவியின் நீர்மட்டம் 67.73 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 203 கன அடி தண்ணீர் வீதம் வந்துகொண்டு இருக்கிறது.

Related Stories: