×

டெல்லியில் 8ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிப்பு: காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: டெல்லியில் வருகிற 8ம் தேதி காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது. நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில் என்றைக்கும் குரல் கொடுப்போம் என்றும் திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலம் அங்கம் வகித்து வந்தது. மெஜாரிட்டி இல்லாமல் இருந்த காங்கிரசுக்கு 10 ஆண்டுகள் ஆட்சி நடத்த திமுக ஆதரவு கொடுத்தது. பிரதமர் வேட்பாளராக காங்கிரசே ராகுலை அறிவிக்க தயங்கிய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. கூட்டணி இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.

இப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி மக்களவை தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இவ்வளவு காலம் திமுக கூட்டணியில் பயணித்து விட்டு, சந்தர்ப்பவாதத்திற்காக தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதா என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளே குற்றம் சாட்டினர்.

அதே நேரத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதாவது, நடந்து முடிந்த தேர்தலில் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான திமுக உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர். இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர்.

பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைபிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது. அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.

தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத கட்சி காங்கிரஸ் என்று வன்மையான கண்டனத்தை திமுகவினர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக் காயமுற்றிருக்கும் திமுக, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகிற ஜூன் 8ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டெல்லி ‘‘கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8ம் தேதி நடைபெறும் ‘‘இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாக தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம், எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் உள்ளிட்ட-ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாக துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.

அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது. ‘‘இந்தியா” கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்னைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார்.

இதை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் திமுக தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8ம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘‘இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது.

இக்கூட்டத்தில் பங்கேற்காத அதே நேரத்தில்-இந்த கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளதால், தங்களுக்கு நாடாளுமன்றத்தில் தனியாக இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று திமுக சார்பில் சாபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : IMUKA ,INDIA ALLIANCE ,DELHI ,Chennai ,Dimuka ,Congress Party ,India ,Alliance ,Tamil Nadu ,
× RELATED சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும்...