நெல்லை: மூலைக்கரைப்பட்டி அருகே தனது எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், மகளின் வீட்டின் மீது தந்தையே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி முருகனின் மகள் வித்யாவும் (20) காதலித்து வந்தனர். வித்யா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர்களின் காதலுக்கு தந்தை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீற கடந்த மாதம் 20ம் தேதி வித்யாவும், முத்துக்குமாரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கருணை கிராமத்தில் உள்ள முத்துக்குமாரின் வீட்டில் வசித்து வந்தனர். முத்துக்குமார் தனது கிராமத்தில் வேறொரு இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். நேற்று இரவு தம்பதியினர் இருவரும் தங்களது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் வித்யாவின் தந்தை முருகன் ஆத்திரத்துடன் முத்துக்குமாரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாததை கண்டு மேலும் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாளால் வீட்டின் கதவை சரமாரியாக வெட்டினார். பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதற்குள்ளாக பெட்ரோல் குண்டை வீசினார். இதில் வீடு தீப்பிடித்து எரியத் ெதாடங்கியது.
சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை (60) கைது செய்தனர்.
