திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 70 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் ஆரம்ப காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், நாளடைவில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கட்டிடமும் சிதிலமடைந்ததால், 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசில் அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கு ரூ.18 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார். இதனால் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அருகில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகின்றனர். இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டது. அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கட்டுமான பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது புதிய அரசு அமைத்திருப்பதால் கட்டிட பணியை தொடங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருந்தனர். இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட இடம் அளவீடு செய்யப்பட்டு முட்புதர்கள் அகற்றப்பட்டது. விரைவில் பூமி பூஜை நடக்க இருந்தது.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆளும் கட்சியான தவெக பிரமுகர்கள் 2 பேர் உட்பட சிலர் பள்ளி இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக அங்கு கல் நட்டு கம்பி வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி திருவெறும்பூர் பிடிஓ கவிதா தாசில்தாருக்கு நேற்று தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த தாசில்தார் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். இதில் ஆளும்கட்சியான தவெகவை சேர்ந்த சிலர் பள்ளி இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து நில அளவையர்கள் இடத்தை உடனடியாக அளந்ததோடு ஆக்கிரமித்து ஊன்றி இருந்த கல்லை, ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
