நாமக்கல்: மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காவிட்டால் மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கம்.
இதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு வரும் 12ம் தேதி குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து இதுவரையிலும் தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசிடம் பேசி உரிய நேரத்தில் தண்ணீரை பெற்று தர முன்வர வேண்டும்.
வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் திறக்காமல், கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தராமல் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டால் இதனை முறியடிக்கும் விதமாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வரும் 12ம் தேதி அன்று தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் இருந்து புறப்பட்டு கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
