டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர் டெல்சி..!!

புதுடெல்லி: வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என சொல்லப்படுகிறது. 5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இன்றைய தினம் இந்தியப் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துள்ளார். நேற்று தொடங்கிய அதிபர் டெல்சியின் பயணம், ஜூன் 7 வரை 5 நாட்களுக்கு தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்டக் குழு கூட்டத்திற்காக, வெனிசுலா பொறுப்பு அதிபர் டெல்சி உடன் வெனிசுலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல் – தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சர்கள் அடங்கிய பெரிய குழு இந்தியாவிற்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்துவது மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது, இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல், மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கூட்டாண்மை போன்றவை குறித்து இந்த 5 நாள் பயணத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் வெனிசுலா குழுவினர் தங்களின் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைத் திறன்களை அறிவதற்காக இந்தியாவின் எரிசக்தி, மருந்து மற்றும் வாகனத் உற்பத்தி சார்ந்த முக்கியத் தொழிற்கூடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: