திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இன்று அதிகாலை குடும்ப தகராறில் குழந்தைகள் கண்ணெதிரே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஹசீனா பீவி (36). நாலாஞ்சிரா வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. ஹசீனா பீவி மீது சுரேஷ்குமாருக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றும் தகராறு ஏற்பட்டதால் மண்ணந்தலை போலீசில் ஹசீனா பீவி புகார் செய்தார். இருவரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுந்தனர். இந்த நேரத்தில் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தார். அதை பார்த்த குழந்தைகள் அலறினர். பின்னர் சுரேஷ்குமார் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து மூத்த மகள், மண்ணந்தலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ஹசீனா பீவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
