பெரம்பலூர், ஜூன் 3: மேல்நிலைத்துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அரசு உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் மேல் நிலைத்துணைத்தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தக்கல் முறையில் விண்ணப்பிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
2026 ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலைத் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க, கடந்த மே மாதம் 18ம்தேதி திங்கட் கிழமை முதல், 30ம்தேதி வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதித் திட்டத்தில்(தக்கல் முறையில்) ஜூன் மாதம் 1ம் தேதி, 2ம்தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வர்களின் நலன் கருதி 3ம்தேதி, 4ம்தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார்.
