சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்கிறார். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமன் மாற்றப்பட்டு தேர்தல் ஆணையம் சார்பில் சட்ட ஒழுங்கு டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைக்கப்பட்டதை தொடர்ந்து டிஜிபியாக செயல்பட்டு வந்தார்.
தவெக பதவி ஏற்றது முதல் தொடர்ந்து கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வந்தன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். கோவையில் 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிப்பது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு அதிகாரிகள் கடந்த வாரம் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.அந்த ஆலோசனையில் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் டிஜிபிக்களாக உள்ள ராஜிவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வாலை சட்ட ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்திருப்பதால் உடனடியாக விடுவிக்கும்படி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி திங்கட்கிழமை ஒன்றிய அரசின் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். இன்று அவர் தமிழகம் வருகிறார்.
அதைத் தொடர்ந்து அவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று காலை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்கிறார். அவரிடம் சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பணியிடம் வழங்குவது குறித்து தமிழக அரசு இன்று உத்தரவு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
