நெல்லை: நெல்லை தச்சநல்லூரை அடுத்த நயினார்குளம் பகுதியை சேர்ந்த நம்பி மகன் முத்து (25). லோடுமேன். இவர் நயினார்குளம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை நேற்று முன்தினம் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, முத்துவிடம் இருந்து போராடி தப்பித்து வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் லோடுமேன் முத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் வந்த 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து இருட்டு பகுதிக்கு அழைத்து சென்று அத்துமீற முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகாரின்படி டவுன் அனைத்து மகளிர் போலீசார் முத்துவை போக்சோவில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். 2 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த முத்து மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
