தவெக ஆட்சியில் 23 நாட்களில் 111 பாலியல் வன்கொடுமைகள் 64 கொலைகள் நடந்து உள்ளது: கனிமொழி குற்றச்சாட்டு

புளியங்குடி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்த 23 நாள்களில் 64 கொலை சம்பவங்கள், 111 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது என்று கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 23 நாள்கள் கடந்துவிட்டது.

இந்த 23 நாளில் 64 கொலைகள், பெண்களுக்கு எதிரான 111 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது. அதில் 61 சம்பவங்கள் குழந்தைகளுக்கு எதிரானது. இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அந்த பிரச்னைகளை சரி செய்வது பற்றி கவலைப்பட வேண்டும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, திமுகவை குறை சொல்லி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று பெண்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான தீர்வுகளை அரசு தேட வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்கேடை சரி செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு யார் மீது பழி போடலாம் என்று காரணங்களை தேடிக்கொண்டிருந்தால், நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, விவசாயிகளுக்குக் கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டபோது, செய்யக் கூடியவைகளை மட்டுமே வாக்குறுதியாக கொடுக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் திமுக ஆட்சி நிறைவேற்றியது.நிதி நிலை சரியில்லை என்று சொல்லி அரசு பொறுப்பை தட்டிக் கழிக்கக்கூடாது.

எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு அவகாசம் தருகிறோம். ஆனால் தவறு இருந்தால், போராடவும், சுட்டிக்காட்டவும் எந்தக் காலத்திலும் திமுக தவறாது. ஒடுக்கப்பட்ட மக்களோடும், சிறுபான்மை மக்களோடும் தொடர்ந்து உறுதியாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. திமுக ஆட்சியில் எந்தெந்த வகையில், எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியுமோ, அத்தனை சாதனைகளையும் செய்து முடித்திருக்கிறோம்.

22 தொகுதிகளில் தேர்தல் பணியாற்றக்கூடிய பொறுப்பை எனக்கு வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எல்லாவற்றையும் கடந்து நின்று விஸ்வரூபம் எடுத்து நிற்கக்கூடிய இயக்கம் தான் திமுக. அந்த உறுதியோடு தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களோடு நின்று களமாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்’
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதல்வர் விஜய் செயல்பட போவது எப்போது? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: