சென்னை: ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற பகல் கனவு இனி பலிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் ஜோசப் விஜய் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அவரது சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன.
அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் ஜோசப் விஜய், ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு,
அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா? ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற பகல் கனவு இனி பலிக்காது.
