×

8,000 ஊழியர்கள் நீக்கத்தை தொடர்ந்து 7,000 பேரை புதிய ஏஐ டீம்களில் பணி மாற்றம் செய்தது மெட்டா: மேனேஜர்களுக்கும் ஆப்பு

வாஷிங்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் ஏஐ துறையில் தனது கவனத்தை இரட்டிப்பாக்கி வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கை, பணிச்சூழல் மாற்ற நடவடிக்கைகளை மிக வேகமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஒரே இரவில் 8,000 ஊழியர்களின் வேலையை காலி செய்தது மெட்டா. அதைத் தொடர்ந்து தற்போது 7,000 ஊழியர்களை தனது புதிய ஏஐ டீம்களுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.  மெட்டாவின் மனித வள மேம்பாட்டு தலைவர் ஜானெல் கேல் கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 4 புதிய அமைப்புகளுக்கு

7,000 ஊழியர்கள் மாற்றப்படுவார்கள். புதிய டீம்கள், ஏஐ சார்ந்த வடிவமைப்பு, கட்டமைப்புகளை பின்பற்றும். இந்த டீம்களுக்கு மற்ற டீம்களைக் காட்டிலும் குறைவான மேனேஜர்களே இருப்பார்கள்’’ என்றார்.  அடுத்தகட்ட பணி நீக்க அச்சத்திற்கு மத்தியில் இந்த டீம் மாற்றம் நடந்திருக்கிறது. அதோடு, ஏஐ டீம்களுக்கு மேஜேர்களின் எண்ணிக்கையையும் மெட்டா வெகுவாக குறைத்து வருகிறது.

மேனேஜர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களை ஐசி எனும் தனிப்பட்ட பங்களிப்பவர்களாக மாற்றி, டீமுக்கு தலைமை தாங்காமல் சிறப்பு பணிகளில் கவனம் செலுத்த வைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட தனது கட்டமைப்பையும் முன்னுரிமைகளையும் வேகமாக மறுவடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது, தொழில்நுட்ப துறை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த வளர்ச்சி மற்றும் சிக்கலான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தன்னை எவ்வளவு வேகமாக மாற்றிக் கொள்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.

Tags : Meta ,Washington ,Facebook ,Instagram ,WhatsApp ,
× RELATED ஈரான் தாக்குதலால் குவைத் விமான நிலையம் மூடல்