×

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்: தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

சென்னை: ஜூன் 4 பள்ளி திறப்பை முன்னிட்டு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை தகவல் பலகை, இணையதளம், விண்ணப்பத்தில் வெளிப்படையாக வெளியிட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்வி கட்டணத்தை தகவல் பலகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வகுப்பு வாரியாக கல்வி கட்டணத்தை இணையதளத்திலும் மாணவர்களுக்கு வழங்கும் விண்ணப்ப படிவத்திலும் அச்சடித்து வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை மாவட்ட கல்வி அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா...