தாறுமாறாக ஓடிய கார் மோதி பைக்குகள் சேதம்

*சுற்றுலா பயணிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி

பாகூர் : கோடை விடுமுறையை கொண்டாட, புதுச்சேரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், மதுரை பகுதியை சேர்ந்த நண்பர்கள் 6 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று மாலை அரியாங்குப்பம் அடுத்துள்ள வீராம்பட்டினம் கடற்கரையில் மது அருந்திவிட்டு கடற்கரையில் குளித்துள்ளனர்.

பின்னர் ஒரு காரில் புறப்பட்டு புதுச்சேரி நகர பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சந்திப்பு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறி கெட்டு தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளின் மீது மோதி இடித்து நின்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பைக்குள் சேதமடைந்தன.

இதில், அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் இந்த விபத்தில் காரின் முன் சீட்டில் அமர்ந்து வந்த வாலிபர் லேசான காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: