*மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் அடித்து விரட்டினர்
*விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல்துறையினர் தாக்கியதால் விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே, விவசாயிகளை தாக்கிய காவல்துறை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவிரி விவசாய சங்க சார்பில் பயிர் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக விவசாயிகள் தமிழ் பல்கலைக்கழக பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர்.
அப்போது விவசாயிகள் அனைவரும் பேரணியாக வந்த நிலையில் காவல்துறையினர் மாவட்ட கலெக்டரின் நுழைவாயில் கேட்டை பூட்டி வைத்தனர். இதையடுத்து விவசாயிகள் நாங்கள் கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு கொடுக்க வேண்டும் என காவல்துறையிடம் வலியுறுத்தினார். அதற்கு காவல்துறை அனுமதிக்காமல் விவசாயிகள் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
நாங்கள் மனு கொடுக்க தான் வந்திருக்கிறோம், எங்களை ஏன் கைது செய்தீர்கள் என்று தமிழ்நாடு காவிரி விவசாய சங்க தலைவர் பழனியப்பன் காவல்துறையிடம் கேட்டதற்கு வல்லம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவரை நெஞ்சில் தாக்கி கீழே தள்ளிவிட்டார். மேலும் விவசாயிகளின் செல்போனையும் பறித்துக் கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. காவல்துறை அராஜகம் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வல்லம் டிஎஸ்பி காயத்ரி அங்கிருந்த விவசாயிகளை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
எனவே காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தஞ்சை நகர டிஎஸ்பி சோமுசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேசி சமாதானம் செய்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.காவல்துறையின் இந்த செயலால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது கறித்து விவசாயிகள் கூறுகையில், தவெக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மனு கொடுக்க விவசாயிகளை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனு கொடுக்க வந்த எங்களை போலீசை விட்டு அடித்து விரட்டுகிறார்கள். முதல்வர் விஜய் சார் உங்கள் ஆட்சியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லையா. கலெக்டர் ஆபீஸ் வந்த எங்களை போலீசை விட்டு அடிக்க விடுகிறீர்களே. இதை யார் சார் கேட்பது. இவ்வாறு பேசினர்.
விவசாயிகளை ஒருமையில் பேசிய டிஎஸ்பி
தற்போது தஞ்சை மாவட்ட வல்லம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை ஒருமையில் பேசிய வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் காயத்ரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆதவ் அர்ஜூனா பதவி விலக வேண்டும்
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு பேட்டியில் தமிழக விவசாயிகளுக்கு எந்த கஷ்டமும் இல்லை. விவசாயம் ஒரு வேலையும் கிடையாது. கஷ்டமில்லாத தொழில். விளையாட்டுத்துறை கஷ்டமான வேலை. விளையாட்டுத்துறை தான் நாட்டின் முதுகெலும்பு என பேசி உள்ளார்.
இதை அவர் தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை. சோறு எங்கிருந்து கிடைக்கிறது என்பது அமைச்சருக்கு தெரியுமா. எனவே, விவசாயிகளை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
