முதல்வரான பிறகும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் பரப்புரைதான் செய்துள்ளார் விஜய்: அன்புமணி விமர்சனம்

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட வேண்டும். மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை பேசாமல் முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையை நடத்தியுள்ளார். முதலமைச்சரான பிறகும் கூட அறிவிப்புகளை வெளியிடாமல் தேர்தல் பரப்புரை செய்வதை ஏற்க முடியாது.

மேகதாது பிரச்சனை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை விஜய் வெளியிடவில்லை என அன்புமணி குற்றச்சாட்டு சாட்டினார். நெல் கொள்முதல் குறித்த அறிவிப்புகளும் கூட முதலமைச்சர் விஜயின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடியில் நடந்த குளறுபடிகளை திருச்சியில் விஜய் சரி செய்வார் என்று பார்த்தால், அதையும் அவர் செய்யவில்லை. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும்.

ஒருவேளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை. காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்த அறிவிப்புகளும் கூட முதலமைச்சர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: