பழநி: பழநி அருகே, கள்ளத் தொடர்பு விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு பெண்ணை படுகொலை செய்தது தொடர்பாக 2வது கணவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, சிவகிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்து கிடந்தார். அவரது கையில் ‘சாந்தி’ என பச்சை குத்தப்பட்டிருந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பழநி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி காளீஸ்வரி (34) என்றும், இவர் கணவரைப் பிரிந்து மகுடீஸ்வரன் (40) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், காளீஸ்வரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது மகுடீஸ்வரனுக்கு தெரிய வரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்பை கைவிட வில்லை. இது தொடர்பாக நேற்று இரவு காளீஸ்வரிக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன் கல்லைத் தூக்கி மனைவி தலையில் போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் மகுடீஸ்வரனை கைது செய்தனர்.
