சென்னை: ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் மீது, சிங்கப் பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட தவெக அரசு, பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் படையை அமைத்து உள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ள பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடி உள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று கேள்வி எழுப்பி இது என்ன ஒரு வெட்கக்கேடு என கடுமையாக விமர்சித்து உள்ளார்.
“நான் உங்கள் அண்ணன்” என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய் அவர்கள், முதலில் இந்த புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
