புடாபெஸ்ட்: ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து போட்டியான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 36 கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணியும், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆர்செனல் அணியும் தகுதி பெற்றன. இந்த 2 அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் ஆர்செனல் வீரர் ஹாவர்ட்ஸ் கோல் போட்டு அசத்தினார். பதிலுக்கு பிஎஸ்ஜி அணி வீரர்கள் கோல் போட முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகளை ஆர்செனல் அணி வீரர்கள் தடுத்தனர். முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணி முன்னிலையில் இருந்தது. 2வது பாதியின் 64-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் உஸ்மான் டெம்பலே கோல் போட்டார்.
இதனால் ஆட்டம் சமனானது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் போடவில்லை. இறுதியில் 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப் பேஜ் டைம் முடிந்த பிறகும் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது. அதனால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதிலும் யாரும் கோல் போடவில்லை.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு அடுத்ததாக தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற அணியாக பிஎஸ்ஜி மாறியது. இந்த வெற்றியை பிரான்ஸில் உள்ள பிஎஸ்ஜி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
