மாஸ்கோ: இந்தியாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட மற்றும் தற்காலிக வர்த்தக ஏற்பாடு குறித்து பேசி வருவதாக ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் யுரேஷிய பொருளாதா ஒன்றியம் ஆகியவை இடையிலான வர்த்தக தாராளமயமாக்கல் குறித்த பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றுள்ளதாக கஜகஸ்தானில் நடந்த யுரேஷிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், ‘‘தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகை பொருட்களை உள்ளடக்கிய வரையறுக்கப்பட்ட மற்றும் தற்காலிகமான வர்த்தக ஏற்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
இந்தியாவுடனான விஷயங்கள் சற்று அதிக சிக்கலானவை. சொல்லப்போனால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரியது. பரஸ்பர நலன்கள் மிகவும் சிக்கலானவை. வெளிப்படையாக கூறினால் இந்தியத் தரப்பின் கோரிக்கைகளும் மிகவும் லட்சியமானவையாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
