பைப்ரோஸிஸ் நோயை குணப்படுத்த பட்டுப்பூச்சி கூடு மற்றும் கடற்பாசி மூலம் புதிய ஹைட்ரோஜெல் கண்டுபிடிப்பு: சென்னை ஐஐடி அசத்தல்

சென்னை: உடலின் முக்கிய உள் உறுப்புகளைப் பாதிக்கும் பைப்ரோஸிஸ் மற்றும் நாள்பட்ட சிதைவு நோய்களுக்கு மிக எளிய, குறைந்த செலவிலான புதிய சிகிச்சை முறையை சென்னை ஐஐடி நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  தற்போதுள்ள மருத்துவ முறையில் நோயாளிகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரே ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் ”ஹைட்ரோஜெல் டோஸ்” சிகிச்சை முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சென்னை ஐஐடி-யின் உயிரி தொழில்நுட்பத் துறையில் உள்ள ‘திசுப் பொறியியல் மற்றும் உயிரிப் பொருட்கள் ஆய்வகத்தில்’ இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையான முறையில், பட்டுக்கூடுகள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் உயிரிப் பொருட்களின் கலவையை கொண்டு இந்த ஹைட்ரோஜெல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமையையும் சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் மேம்பட்ட பைப்ரோஸிஸ் சிகிச்சை பெற ஒரு நோயாளிக்கு சுமார் 2,000 முதல் 3,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை) செலவாகிறது. ஆனால், சென்னை ஐஐடியின் இந்த ஹைட்ரோஜெல் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, சிகிச்சைக்கான செலவு வெறும் 300 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.25,000) குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களும் அதிநவீன பைப்ரோஸிஸ் சிகிச்சையை மிக எளிதாகப் பெற முடியும். இதுகுறித்து சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், ”தொழில்நுட்பப் பரிமாற்றம், பெரிய மருந்து நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்குதல் மற்றும் ஐஐடி மூலமாகவே புதிய புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் ஆகிய வழிகளில், இந்த எளிய சிகிச்சையை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது” என்றார்.

Related Stories: