சென்னை: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (54). சினிமா தயாரிப்பாளர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர். இதுதவிர திரைப்பட மானியக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவர், கடந்த 26ம் தேதி ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நடத்தவில்லை, 2022-23, 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கைகளை சமர்பிக்கவில்லை, இதற்காக சங்கத்தில் விளக்கம் கேட்டும் எந்த பதிலும் அளிக்காத சங்க செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் தன்னை மூன்று மாத காலம் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கினர். நான் பொது வெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
பின்னர் தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்வதாக ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் கூறியதன் பெயரில் அனைவரது முன்னிலையில் மன்னிப்பு கேட்டேன். என்னை சக தயாரிப்பாளர்கள் முன்னிலையில் பெண் என்று பாராமல் தகாத வார்த்தைளால் திட்டி அசிங்கபடுத்தி அவமானப்படுத்தினர்.
அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்து தகாத வார்த்தைளால் திட்டி மிரட்டி மானபங்கப்படுத்திய தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் திரைப்பட தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
