சென்னை: தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் ஜி.கிருஷ்ணராஜாவை பதவி நீக்கம் செய்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜாவை கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு ஒவ்வொரு துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டத்துறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குற்ற வழக்குகள் தொடர்பு துறையில் சில முறைகேடு புகார்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அமைச்சர் நிர்மல் குமாரின் உத்தரவின் பேரில் கிருஷ்ணராஜாவை பதவியில் இருந்து நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
