×

மதுராந்தகம் அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த தவெக கிளை பொறுப்பாளர் கைது

சென்னை: மதுராந்தகம் அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன், கூலி தொழிலாளி. கடந்த 23ம் தேதி இவரது மனைவி முத்தாலு (75) தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். வீட்டில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டார் என கருதிய உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்தனர். பின்பு அவரது 5 சவரன் செயின், காதில் கிடந்த கம்மலை காணவில்லை என சந்தேகம் ஏற்பட்டதால் முத்தாலு மகன்கள் வீரமணி, உமாபதி மேல்மருவத்தூர் போலீசில் தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர்.

இதில், வீட்டின் அருகில் உள்ள மா மரத்தடியில் தவெக கிளை பொறுப்பாளரான வாசுதேவன் (45) உள்பட சிலருடன் முத்தாலு அமர்ந்திருப்பார். ஆனால் சம்பவம் நடந்த நாள் முதல் வாசுதேவன் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. புகாரின்படி, ஓசூரில் மறைந்திருந்த வாசுதேவனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

இதில், நகையை பறித்துக்கொண்டு மூதாட்டியை கீழே தள்ளியதாகவும், தலையில் காயம் அடைந்து அவர் இறந்து விட்டதாகவும், வழுக்கி விழுந்து இறந்ததாக நம்ப வைக்க வீட்டு தரையில் தண்ணீர் ஊற்றியதாகவும் வாசுதேவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையில் மேல்மருவத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் கடந்த வாரம் புதைக்கப்பட்ட மூதாட்டி உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

Tags : Daveka ,Panapuri ,Madurandkam ,Chennai ,Saminathan ,Alamur ,Madurantham ,Mutalu ,
× RELATED ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு தர்ம அடி