×

மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைத்துள்ளதால் தினமும் 10 ஆயிரம் பேர் வங்க தேசத்துக்கு தப்பி ஓட்டம்: அமித் ஷா பேச்சு

அகமதாபாத்: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைத்துள்ளதால் தினமும் 10 ஆயிரம் பேர் வங்க தேசத்துக்கு தப்பி ஓடுவதாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறினார். அகமதாபாத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா கூறியதாவது: தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) நடவடிக்கையை அறிமுகப்படுத்திய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரது கூட்டணி கட்சிகளும் அதற்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கினர்.

ஆனால் மேற்கு வங்க தேர்தலில் மக்கள் எஸ்ஐஆர் திட்டத்திற்கு ஆதரவாக நின்று வாக்களித்துள்ளனர். நாட்டிற்குள் சட்ட விரோத ஊடுருவல் அனுமதிக்கப்படக்கூடாது என்பதை அந்த மாநில மக்கள் உறுதிப்படுத்தினர். தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) நடவடிக்கையின் அரசியலமைப்புச் செல்லுபடியை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

மாநிலத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னர் வங்க தேசத்தில் இருந்து நாட்டிற்குள் வரும் ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பொறுப்பு ஏற்றார். முன்பு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் நாட்டிற்குள் நுழைவார்கள். தற்போது, நிலைமை மாறி தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Bangladesh ,BJP ,West Bengal ,Amit Shah ,Ahmedabad ,Union Minister ,Election Commission… ,
× RELATED ஆளுநரின் செயலாளரிடம் கடிதம்...