நார்வே செஸ் தொடர் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஓஸ்லோ: நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒருமுறை வீழ்த்தி அதிர வைத்துள்ளார். ஏற்கனவே 2024-ம் ஆண்டு இதே தொடரில் கார்ல்சனை வீழ்த்தியிருந்த பிரக்ஞானந்தா, தற்போது 2-வது முறையாக அவரை வீழ்த்தி சர்வதேச செஸ் உலகில் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடிய பிரக்ஞானந்தா, அனுபவம் வாய்ந்த கார்ல்சனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஆட்டத்தின் நடுப்பகுதியில் கார்ல்சன் சில வாய்ப்புகளை உருவாக்க முயன்றாலும், நேர நெருக்கடி காரணமாக அவர் செய்த ஒரு சிறிய தவறைப் பயன்படுத்திக் கொண்ட பிரக்ஞானந்தா ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

இறுதியில் நெருக்கடியைத் தாங்க முடியாமல் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்திலிருந்து விலகினார். கார்ல்சனுக்கு இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கார்ல்சனுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் தொடரில் கூடுதலாக 4.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் மற்றும் தொடரில் முன்னிலையில் உள்ள அலிரேசா பிரௌஸ்ஜா ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. பின்னர் வெற்றி வீரரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘அர்மகெடன்’ முறையில் பிரௌஸ்ஜா வெற்றி பெற்று கூடுதல் புள்ளிகளைப் பெற்றார்.

Related Stories: