நியூ சண்டிகரில் இன்று 2வது குவாலிபயர் போட்டி; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை: பைனலுக்கு முன்னேறுவது யார்?

நியூ சண்டிகர்: நியூ சண்டிகரில் இன்றிரவு நடக்கும் 2வது குவாலிபயர் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 19வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பஞ்சாப் மாநிலம், நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், தர்மசாலாவில் நடந்த இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் சாய் சுதர்சன் 652 ரன் எடுத்து இரண்டாவது இடத்திலும், கேப்டன் சுப்மன் கில் 618 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

ஜோஸ் பட்லர் 498 ரன், வாஷிங்டன் சுந்தர் 311 ரன் எடுத்துள்ளனர். இதை தவிர ராகுல் திவாட்டியா, கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவிப்பார். பவுலிங்கில் ரபாடா 26 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். சுழலில் ரஷித் கான் 19 விக்கெட், வேகத்தில் முகமது சிராஜ் 17 விக்கெட் எடுத்துள்ளனர். இவர்களுடன் ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி அளிப்பர்.

மறுபுறம் லீக் சுற்றில் தட்டு தடுமாறி, நான்காவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் 15 வயது இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டி வருகிறார். ஒரு சதம், 4 அரை சதத்துடன் 680 ரன் விளாசி, ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இந்த தொடரில் 65 சிக்சர், 52 பவுண்டரிகள் விளாசி இருக்கிறார்.

அவரது ஸ்டிரைக் ரேட் 242.85 ஆக உள்ளது. மேலும், துருவ் ஜூரல் 6 அரை சதத்துடன் 508, ஜெய்ஸ்வால் 426 ரன் அடித்துள்ளனர். மிடில் ஆர்டரில் கேப்டன் ரியான் பராக், பெரேரா அதிரடியாக ஆடக்கூடியவர்கள். பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் 24 விக்கெட் எடுத்து வேகத்தில் மிரட்டுகிறார். அவருடன் பர்கர், பிரிஜேஷ் சர்மா, யாஸ் ராஜ், சுழலில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சம பலத்துடன் உள்ள இரு அணிகளும் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்பில் களம் இறங்குவதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 31ம் தேதி பைனலில் நடப்பு சாம்பியன் ஆர்சிபியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

* இதுவரை நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதற்கு முன் பத்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் 7 போட்டியிலும், ராஜஸ்தான் 3 போட்டியிலும் வென்றுள்ளன. நடப்பு சீசன் முதல் போட்டியில், ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் குஜராத் 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories: