- கர்நாடக
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- ஆளுநர் செயலாளர்
- டி. கே. சிவகுமார்
- பெங்களூர்
- துணை முதல்வர்
- D.K.
- லோக் பவன்
- சிவகுமார்
- கவர்னர்
- காங்கிரஸ்
- 2023 தேர்தல்கள்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா நேற்று ராஜினாமா செய்தார். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்களுடன் லோக்பவன் சென்ற அவர் ஆளுநரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தார். கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றார். இவர்கள் இருவருக்குமிடையே தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மேலிட தலைவர்கள் முன்னிலையில் நடந்தது.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்தது. இதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சித்தராமையா, டி.கே.சிவகுமாரை மேலிட தலைவர்கள் டெல்லிக்கு அழைத்தனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இருவரிடமும் தனித்தனியாக 6 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சித்தராமையாவை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டனர். மேலிட உத்தரவை ஏற்ற சித்தராமையா நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று காைல அமைச்சர்களுக்கு விருந்து அளித்தார். இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கலந்து கொண்டு சித்தராமையாவை கட்டித்தழுவி காலில் விழுந்து ஆசிபெற்றார். பின்னர் அமைச்சர்கள் சித்தராமையா பதவி விலகுவதை ஏற்கமுடியாமல் கண்ணீர் விட்டனர்.
இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் குழுவுடன் லோக்பவன் சென்ற சித்தராமையா, ஆளுநர் இல்லாததால் அவரது செயலாளரிடம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் அளித்தார். அதை அவரும் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது, ‘ கடந்த 3 ஆண்டுகளாக எனது தலைமையிலான நிர்வாகத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நான் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எம்.எல்.ஏவாக உங்களுடன் இருப்பேன். டி.கே.சிவகுமார் தான் அடுத்த முதல்வர் என்று மேலிடம் கூறியுள்ளது. நான் அரசியலில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவேன். 2028லும் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். 3 ஆண்டுகால அரசின் நல்ல பணிகளைத் தொடருங்கள். மாநிலம் நல்ல நிதி நிலையில் உள்ளது. அனைவரும் டி.கே.சிவகுமாருக்கு ஒத்துழைக்க வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளுக்கு அரசாங்கம் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்புடன் அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்’ என்றார்.
* ஆதரவாளர்கள் போராட்டம்
சித்தராமையா நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்காக, அரசு இல்லமான காவேரியிலிருந்து சித்தராமையா லோக் பவனுக்கு புறப்பட்டபோது, காவேரி இல்லத்துக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள், சித்தராமையா ராஜினாமா செய்யக்கூடாது என்று முழக்கங்களை எழுப்பினர். அவர்களை சித்தராமையா ஆசுவாசப்படுத்திவிட்டுச் சென்றார். அதேபோல மைசூரு, ஷிவமொக்கா, யாதகிரி என மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சித்தராமையாவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
* நீண்டநாள் முதல்வர்
கர்நாடக முதல்வராக அனுபவமிக்க சித்தராமையா 2 ஆயிரத்து 900 நாட்களுக்கு மேல் இருந்து சாதனை படைத்துள்ளார். அதன்படி நீண்டகால முதல்வர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு முன்பு தேவராஜ் அர்ஸ் நீண்டகால முதல்வராக பதவி வகித்தார். அவரது சாதனையை கடந்த ஜனவரி மாதம் சித்தராமையா முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஆளுநர் எங்கே?
கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருடைய உறவினர்கள் உடல்நலம் சரியில்லை என்பதால் அவர்களை பார்க்க மத்திய பிரதேசம் சென்றுவிட்டார். அதனால் அவரால் ராஜினாமா கடிதத்தை நேரில் பெற முடியவில்லை. அவர் இன்று மீண்டும் பெங்களூரு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக இந்தவாரத்தில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
