×

கோவையில் மீண்டும் கொடூரம்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

 

கோவை: கோவையில் ஏற்கனவே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதனால், தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். முத்துக்குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி, கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

பக்கத்து வீடு என்பதால், இச்சிறுமி அடிக்கடி முத்துக்குமார் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளார். அதேபோல், கடந்த 19ம்தேதி (செவ்வாய்) இச்சிறுமி, முத்துக்குமார் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளார். அப்போது, முத்துக்குமார் உணவு சமைத்து கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அச்சிறுமி, அவரிடமிருந்து தப்பி, வீட்டிற்கு அழுதபடி சென்றுள்ளது. அவரது தாயார் விசாரித்தபோது, அச்சிறுமி, நடந்ததை தாயிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முத்துக்குமாரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, முத்துக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை நேற்று மாலை கைதுசெய்தனர். கோவையில் சமீபத்தில் 10 வயது மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் கோவையில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Coimbatore ,Muthukumar ,Coimbatore Racecourse ,
× RELATED வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக...