சேலம்: நாடு முழுவதும் கடந்த 11 நாட்களுக்குள் 5வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஒன்றிய பாஜ அரசு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலம் உயர்த்தி வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் 7ம் தேதி 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60ம், மே 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.998ம் அதிகரிக்கப்பட்டது. இதன்பின், கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை சராசரியாக ரூ.3ம், 19ம் தேதி ரூ.1ம், 23ம் தேதி ரூ.1ம், நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை ரூ.2.40 முதல் ரூ.3 வரையும் உயர்த்தினர். தொடர்ந்து 5வது முறையாக நேற்று காலை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசும், டீசல் லிட்டருக்கு 23 காசும் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 இருந்து ரூ.108.01 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.78 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் அதன் விலை விரைவில் சதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தை பொறுத்தவரை, பெட்ரோல் ரூ.108.84 ஆகவும், டீசல் ரூ.100.66 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேபோல், டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.102.12, டீசல் ரூ.95.20 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.113.47, டீசல் ரூ.99.82 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 11 நாட்களில் நேற்று 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்டவைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
