தேன்கனிக்கோட்டை, மே 26: அஞ்செட்டி அருகே, சேசுராஜபுரம் கிராமத்தில் மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளைம் ஊராட்சி சேசுராஜபுரம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக மின்வெட்டு காரணமாக கிராமத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டால் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை சேசுராஜபுரம் கிராம மக்கள், நாட்றாம்பாளையம்-ஒகேனக்கல் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து, காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர். அதன் பின்னர், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
