தவெகவின் குதிரை பேர அரசியல் வெட்டவெளிச்சமாகி வருகிறது: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

 

சென்னை: தவெகவின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியமைக்க 107 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் 12 எம்எல்ஏக்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. அப்போது அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் விஜய் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த மே 8 அன்று இரவு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த டிடிவி.தினகரன், தனது கட்சியின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்று புகார் அளித்தார்.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் ஒரு ஜெராக்ஸ் நகல் ஆதரவுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது குதிரைபேரம் அல்லது மோசடி என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு பிறகு சட்டசபையில் காமராஜ் தவெகவிற்கு ஆதரவாக பேசியதாக கட்சியில் இருந்து அவரை டிடிவி.தினகரன் நீக்கினார். தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெகவின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஜெயலலிதா தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: