சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 98 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 36 பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது.
இப்பள்ளிகளில் +2 பயிலும் மாணாக்கர்கள் NEET, JEE, CUET, CLAT, CIPET மற்றும் NIFT போன்ற 19 வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு இதுநாள் வரை பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்படி நுழைவுத் தேர்வுகளைத் திறம்பட எதிர்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் மூலம் தேர்வு செய்யப்படும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் இத்துறை மூலம் ஏற்கப்படுகிறது.
கடந்த 2023-2025-ஆம் ஆண்டுகளில் 199 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி சிறப்பு நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சேர்ந்துள்ளனர்.
2025-2026-ஆம் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் சேர அனைத்து உயர்கல்வி சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடி, மாதிரி பள்ளி, திருச்சி. EMRS அபிநவம் பள்ளி, சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, மல்லூர் EMRS குமிழி, செங்கல்பட்டு, மாதிரி பள்ளி, கடலூர் ஆகிய இடங்களில் அனைத்து வார இறுதி நாட்களில் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
