சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். ஓமலூர் அடுத்து செம்மாண்டப்பட்டி அருகே உள்ள ஏனாதி என்கிற கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பாலத்தின் மேல் பகுதியில் ரயில் செல்லக்கூடிய வகையிலும் அந்த பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலும் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் மழை பெய்கின்ற நேரமெல்லாம் மழை நீர் தேங்கி இருப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக ஏனாதி பகுதியில் இருக்கக்கூடிய இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த கார் திடீரென கட்டுப்பாட்டினை இழந்து,சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.
மூழ்கிய காருக்குள் இருந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணிரில் மூழ்கி உயிரிழந்தவர்களுடைய உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
