திருச்சி: திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் நோய் காரணமாக மருத்துவச் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் சர்வதேசஅளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசைவலி, வாந்தி, வயிற்று போக்கு, காரணமில்லாத ரத்த போக்கு மற்றும் தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறையின் அறிவுறுத்தலின்படியும், எபோலா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்டறிந்து பாதிப்பு இருந்தால் அவர்களை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவல் சமயத்தில் தனிமைப்படுத்தல் வார்டாக செயல்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேர கண்காணிப்பு வார்டாக செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
