பூந்தமல்லி, மே 25: ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே உள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைப பார்த்து அங்கிருந்து அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது நாசவேலை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
