சண்டிகர்: தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அகற்றுவது தொடர்பாக பஞ்சாப் அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு நடிகை ரவீனா டாண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பொது இடங்களில் நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணிகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார்.
அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்ட நாய்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகை ரவீனா டாண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், விலங்குகளின் நலனிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். தெருநாய்களை அகற்றுவதற்குப் பதிலாக கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துவதே நிரந்தர தீர்வாக அமையும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ‘விலங்குகளுக்கு முறையான காப்பகங்களை ஏற்படுத்தி, அவற்றிற்கு மறுவாழ்வு அளிக்க அரசு முன்வர வேண்டும். ஊமையாக இருக்கும் விலங்குகளை நாம் நடத்தும் முறை யே, நம்முடைய சமூகத்தின் பண்பை பிரதிபலிக்கும். இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சோனு சூட், நடிகை சோனம் பாஜ்வா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், தெருநாய்களை அகற்றும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கடும் நோய் பாதிப்புள்ள அல்லது ஆக்ரோஷமான நாய்களைத் தவிர, மற்ற நாய்களைக் கொடுமைப்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்பதே விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
