மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சமாக பாரிஸ் சுற்றுலா சென்ற 27 மருத்துவர்களுக்கு சிக்கல்: 3 பேரை ஒன்றிய அரசு காப்பற்றியது ஏன்?

டெல்லி: மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற 30 மருத்துவர்களின் பட்டியலில், 3 பேர் நீக்கப்பட்டு 27 பேரின் பெயர்கள் மட்டுமே நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அப்வி பார்மா நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான பாரிஸ் மற்றும் மொனாக்கோ சுற்றுலா பயணத்தை லஞ்சமாகப் பெற்றதாக 30 மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஒன்றிய அரசு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்மட்டக் குழு 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, துறை சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுப்பப்பட்ட பட்டியலில், 30 பேருக்குப் பதிலாக 27 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. மாயமான அந்த 3 மருத்துவர்களின் பெயர்கள் எப்படி நீக்கப்பட்டன என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் டாக்டர் அபிஜித் ஷெத், ‘கடந்தாண்டு செப்டம்பரில் 27 மருத்துவர்கள் பெயர்கள் மட்டுமே எங்களுக்கு கிடைத்தன. அந்தப் பெயர்கள் சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில்களுக்கு விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

இதில் எந்தெந்த மாநிலங்களுக்கு பெயர்கள் அனுப்பப்பட்டன என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. மேலும், லஞ்சம் பெற்ற அந்த மருத்துவர்களின் பெயர்களை வெளியிடவும் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில், கேரள மருத்துவ கவுன்சிலுக்கு ஒரே ஒரு மருத்துவரின் பெயர் மட்டுமே அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கேரள கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பொறுப்பற்ற செயலால், ஊழல் செய்த மருத்துவர்கள் தப்பித்துவிட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: