டெல்லி: கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா 3 ரூபாய் உயர்த்திய ஒன்றிய அரசு, அதனைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களில் மட்டும் 5 ரூபாய் வரை விலையை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து 105.31 ரூபாய்க்கும், டீசல் விலை 87 பைசா உயர்ந்து 96.98 ரூபாய்க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில், ‘விலைவாசி உயர்வால் மக்கள் ஏற்கனவே தவித்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 9 நாட்களில் 5 ரூபாய் வரை உயர்த்தி, மக்களை மோடி கொள்ளையடிக்கிறார். உலக நாடுகள் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் நிலையில், ஒன்றிய அரசு தனது மக்களைப் பழிவாங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறது.
மக்கள் நலனை ஒருமுறையாவது சிந்தியுங்கள், எவ்வளவு காலம் முதலாளிகளுக்கு சாதகமாகச் செயல்படுவீர்கள்?’ என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
