கோவை: தமிழகத்தை உலுக்கி உள்ள கோவை சிறுமி கொலை வழக்கில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை மேற்கு மண்டல ஐஜி உறுதிப்படுத்தி உள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த கார்த்தி என்பவன் தான் சிறுமியிடம் பேசி அழைத்து சென்றுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கைது செய்யபட்டுள்ள மற்றொரு நபரான மோகன்ராஜ், குற்றத்தை மறைக்க முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஐஜி ரம்யா, கைது செய்யப்பட்டுள்ள இருவரில் கார்த்தி மீது மட்டுமே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கை மூலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சிறுமி எப்படி கொல்லப்பட்டார், சிறுமியின் மரணத்திற்கான காரணம் என்ன என்ற விவரங்கள் எல்லாம் என்பது முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்றார்.
சிறுமி காணாமல் போண்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென 250 சிசிடிவி கேமராக்களை இரவு முழுவதும் தனிப்படையினர் சோதனை செய்தனர். இதனால் தான் முக்கிய ஆதாரங்களை எங்களால் திரட்ட முடிந்தது என்று சூலூர் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான நபரான கார்த்தி, சிறுமியை அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளி கார்த்தியை போலீசார் சுற்றி வளைத்தபோது, மேல்மாடியில் இருந்து அவன் குதித்து தப்பிக்க முயன்றான். அப்போது அவனுக்கு வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்பு கொண்டான். முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக 24 மணி நேரத்திற்குள் வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.
