தாரமங்கலம் அருகே பிறந்து 7 நாள் ஆன பெண் சிசு திடீர் சாவு

 

தாரமங்கலம், மே 23: தரமங்கலம் அருகே பிறந்த 7 நாட்களே ஆன நிலையில் திடீரென்று இறந்த பெண் சிசு குறித்து தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தொட்டியனூர் பகுதியை சேர்ந்தவர் பொம்மை நாயக்கர் மகன் செல்லதுரை. கட்டிட கூலித்தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் கட்டிட வேலைக்கு சென்றபோது, அங்கு நித்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் நித்யாவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் பால் கொடுத்து கொண்டிருந்த போது, குழந்தை திடீரென வாந்தி எடுத்துள்ளது. உடனடியாக உறவினர்கள் குழந்தையை, தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், சேலம் கொண்டு செல்வதற்காக முயற்சி செய்தனர். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை பேச்சு, மூச்சில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

குழந்தை இறந்ததில் சந்தேகம் இருப்பதாக தாத்தா குழந்தைவேல் என்பவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: