சேலம் சரக மாவட்டங்களில் தொடரும் அறிவிக்கப்படாத திடீர் மின்தடை

 

சேலம், மே 23: ேசலம் சரக மாவட்டங்களில் தொடரும் அறிவிக்கப்படாத மின்தடை, கோடை வெப்பத்தில் தகிக்கும் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலமாக கருதப்படுகிறது. இதில் அதிகளவில் வெயில் பதிவாகும் நாட்கள், கத்திரிவெயில் என்னும் அக்னி நட்சத்திர காலமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வகையில், நடப்பாண்டு இம்மாதம் (மே) 4ம்ேததி, அக்னிநட்சத்திர காலம் தொடங்கியது. இது இம்மாதம் 28ம்தேதிவரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, பெரும்பாலான மாவட்டங்களில் 100டிகிரியை தாண்டி கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சேலம் சரக மாவட்டங்களில் திடீரென நிகழும் அறிவிக்கப்படாத மின்தடை, வெப்பத்தில் தகிக்கும் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீரென அறிவிக்கப்படாத மின்தடை நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக உச்சிவெயில் கொளுத்தும் நண்பகல் 12மணி, மதியம் 3மணி, அதிகாலை 2மணி என்றுதான், இந்த மின்தடை நிகழ்கிறது. இது வீட்டில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மதியம் உணவு அருந்தும் நேரம், சற்று ஓய்வெடுக்கும் நேரம், நன்றாக கண் அயர்ந்து தூங்கும் அதிகாலை நேரங்களில் திடீரென மின்விசிறிகள் சுழல்வது நின்று விடுகிறது.

இதனால் குழந்தைகளை வைத்திருக்கும் வீடுகளில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வீட்டில் இருக்கும் நோய்வாய்ப்பட்ட முதியவர்களும் கடுமையாக சிரமப்படுகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள், இதற்காக போராட்டம் நடத்தும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, அறிவிக்கப்படாத மின்தடையை தவிர்ப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், மின்நிறுத்தம் அறிவிக்கப்படும் நாட்களில் குறிப்பிட்ட நேரம் கடந்தும், மின்சாரம் வழங்காத நிலையும் உள்ளது. இதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

 

Related Stories: