×

மேகதாது அணை விவகாரம் – காங்., தயவில் ஆட்சியிலுள்ள தவெக, கர்நாடக அரசை எதிர்க்குமா.? EPS கேள்வி

சென்னை: மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்து வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.

கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

Tags : Mekedadu ,Congress ,Teva government ,Karnataka ,EPS ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Deputy Chief Minister ,D.K. Shivakumar ,Tamil Nadu ,Mekedadu Dam ,
× RELATED சென்னை உயர் நீதிமன்றத்தில்...