×

சூனாம்பேடு அருகே பயங்கரம்; கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞர் வெட்டிக்கொலை: பெண்ணின் கணவர், தந்தை உள்பட 7 பேர் கைது

 

செய்யூர், மே 22: சூனாம்பேடு அருகே, திருமணமான பெண்னுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரை வெட்டிக்கொன்று, புதரில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த தாமரைக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் விஜய் (31). இவர், கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து, அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே பெண்ணின் கணவர் மற்றும் தந்தை இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் தங்கள் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு விஜய் சென்றுள்ளார். இதனையறிந்த, பெண்ணின் குடும்பத்தினரும் அங்கு சென்று விஜய்யை கடுமையாக தாக்கியதோடு அரிவாளால் விஜய்யின் இடது காலை துண்டாக வெட்டியுள்ளனர். தொடர்ந்து, மயக்க நிலையில் இருந்த விஜய்யின் வாயில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றி குடிக்கவைத்து துடிதுடிக்க கொன்றுள்ளனர். பின்னர், விஜய்யின் உடலை யாருக்கும் தெரியாமல் கிராமத்தின் அருகே உள்ள புதரில் சென்று வீசியுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் விஜய் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை புதரில் விஜய் கால் வெட்டப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அங்கு சென்ற சூனாம்பேடு போலீசார் விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை, கணவர் உள்பட 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Sunambedu ,Seyyur ,Mani ,Thamaraikeni ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ம்...