காரைக்குடி: காரைக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதோடு, ஆணையாளர் வாகனத்தையும் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இங்கு பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு, மற்ற மாநகராட்சிகளின் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். துப்புரவு வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும்.
தற்காலிக தூய்மை பணியாளர்களை அடிக்கடி இடமாறுதல் செய்ய கூடாது. பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த ஆணையாளர் சங்கரன் வாகனத்தை சிறைபிடித்தனர்.
அதிகாரிகள் சமாதானப்படுத்திய பிறகு அந்த வாகனத்தை விடுவித்தனர். மேலும், காரைக்குடி – தேவகோட்டை பிரதான சாலையில் கொப்புடையநாயகி அம்மன் கோயில் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில், 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
