புதுச்சேரி: புதுச்சேரியில் 16வது சட்டசபைக்கு தேர்வான 27 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முன்னிலையில் பதவியேற்றனர். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கடந்த 13ம் தேதி பதவியேற்றனர். சட்டசபைகூடி புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, புதிய எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்க அதிமுக உறுப்பினரான அன்பழகனை தற்காலிக சபாநாயகராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கடந்த 18ம்தேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் இன்று நடைபெற்றது. தற்காலிக சபாநாயகரான அன்பழகனை தவிர்த்தும், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ததன் அடிப்படையிலும், மீதமுள்ள 27 எம்எல்ஏக்களும் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் காலை 9.30 மணியளவில் பதவியேற்றனர். முதலில் முதல்வர் ரங்கசாமியும், அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவும் பின்னர் சிவக்கொழுந்து, ராஜவேலு, எதிர்க்கட்சி தலைவராக திமுக நாஜிம் உள்ளிட்ட மற்ற எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து உறுதிமொழி ஏற்று கொண்டனர். திருபுவனை தொகுதி எம்எல்ஏ சாய்.ஜெ.சரவணன்குமார் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. அடுத்தகட்டமாக முதல்வருடனான ஆலோசனைக்குபின் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மலையாளத்தில் பதவியேற்ற திமுக எம்எல்ஏ
பாகூர் தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார், மும்மொழிக்கொள்கையில் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டதை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில், சட்டசபை செயலர் தயாளனிடம் பிரெஞ்சு மொழியில் பதவிப்பிரமாணம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அதன் பிரெஞ்சு மொழி ஆக்கத்தையும் கொடுத்திருந்தார்.
அதற்கு சட்டசபை செயலர், 1963ம் ஆண்டு யூனியன் பிரதேச அரசு சட்டத்தின் பிரிவு 34(2)ன் படி, சட்டமன்றத்தில் நடைபெறும் அலுவல்கள், அந்த யூனியன் பிரதேசத்தின் அலுவல் மொழி அல்லது இந்தி அல்லது ஆங்கிலத்திலோ நடைபெற வேண்டும். 1965ம் ஆண்டு புதுச்சேரி அலுவல் மொழிகள் சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் பயன்படுத்தலாம் என்றார். அதனால் எம்எல்ஏ செந்தில்குமார் மலையாளத்தில் பதவியேற்று கொண்டார்.
தவெக எம்எல்ஏவுக்கு கண்டிப்பு
மணவெளி தொகுதி தவெக உறுப்பினர் ராமு பதவியேற்றபோது, கடவுளறிய எனக்கூறி தனது பாக்கெட்டில் வைத்திருந்த விஜய் படத்தை காட்டிய நிலையில் சபாநாயகர் அன்பழகன் அவரை கண்டித்தார். மேலும் நாட்டில் ஆயிரத்து எட்டு கடவுளுக்கு மேல் இருக்கிறார்கள். இதில் 1009வது கடவுள் வேறா? இதையெல்லாம் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
