சத்தியமங்கலம், மே 20: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் தினமும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி அருகே உள்ள திகினாரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ரங்கசாமி கோவில் தோட்டம் பகுதியில் கனகராஜ், ராசுக்குட்டி மற்றும் புட்டண்ணா ஆகியோரது விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானைகளை டார்ச் லைட் அடித்தபடி சத்தம் போட்டும், ரோந்து வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணி மேற்கொண்டனர்.
